Wednesday 11 April 2018

தாது மணல் தொழிலால் சிறுநீரக பாதிப்பு என்ற பிரச்சாரம் உண்மை அல்ல - சிறுநீரக மருத்துவ நிபுணர் ஆய்வறிக்கை இது உலகளாவிய நோய் என்பதை வெளிகொணர்ந்து விட்டது.


தாது மணலுக்கு எதிராக செய்யப்படும் இன்னொரு பொய் பிரச்சாரம் சிறுநீரக நோய் என்பது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது 20 வருடங்களுக்கு மேல் இந்த தாது மணல் தொழிலில் ஈடுபட்டுள்ள எந்த தொழிலாளியும் அல்லது அவர் தம் குடும்பத்தினரும் அல்லது தாது மணல் தொழிற்சாலை அல்லது சுரங்க பகுதியை ஒட்டி வசிக்கும் பொது மக்களில் யாரும் இது வரை சிறுநீரக நோயால் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் இது பற்றி விரிவாக தெரிவோம் என நமது சங்கத்தில் இருந்து பல்வேறு சிறுநீரக நோய் நிபுணர்களிடம் கருத்துரை கேட்கப்பட்டது. அவர்கள் கூறிய கருத்து கீழ்கண்டவாறு.


1) தவறான மருந்து, மாத்திரைகள் அல்லது உலோகங்கள் அடங்கிய பஸ்பங்கள் ஆகியவற்றை சாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்கும்.

2) நாள்பட்ட நீரழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவில்லை என்றால் அவை சிறுநீரகம், இதயம் உட்பட ஏராளமான உறுப்புகளை பாதிக்கும்.

3) இந்தியாவில் 17 சதவீத நபர்கள் ஏதாவது ஒரு வகை சிறுநீரக நோயில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதிலும் மூன்றில் ஒரு பங்கினர் சிறுநீரக நோய் முற்றிய நிலையில் உள்ளார்கள் என்பதை ஹார்வேர்டு மருத்துவ கல்லூரி 13 மருத்துவ நிலையங்களோடு கூட்டு சேர்ந்து இந்தியா முழுவதும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளது. 

4) உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு சுமார் 6 கோடி மக்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் முறையான மருத்துவ சிகிச்சையோ அல்லது மருத்துவ ஆய்வோ மேற்கொள்ளவில்லை.

5) அவ்வாறு பாதிக்கப்பட்ட நீரழிவு நோயாளிகளில் 1.80 கோடி நபர்கள் (30 சதவீதம்) சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுநீரக நோயினாலும் பாதிக்கபட்டுள்ளார்கள்.

6) 72 லட்சம் பேர் முற்றிலும் சிறுநீரகம் செயல் இழந்து நோயின் 5-ம் நிலைக்கு வந்து விட்டார்கள் அதாவது கிட்னி மாற்ற வேண்டும்  அல்லது டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

7) இன்னொரு கொடுமையான செய்தி ஆண்டுக்கு 2 லட்சம் பேர் புதிதாக சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதில் 40,000 நபர்கள் மட்டுமே முறையான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். 

8) குறைந்த பட்சம் 20 லட்சம் பேருக்கு இந்தியா முழுவதும் டயாலிசிஸ் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே டயாலிசிஸ் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சிறுநீரக நோயில் கடைசி கட்டத்தில் வந்தவர்கள் மட்டுமே டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு வருகிறார்கள். மருத்துவர்கள் கண்டுபிடிக்கும் ஆண்டுக்கு 2 லட்சம் பேரிலும் பாதிக்கு மேற்பட்டவர்கள் கடைசி நிலையிலேயே மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

9) உலகம் முழுவதும் சிறுநீரக நோய் உள்ளது. எனவே தாது மணல் தொழிலுக்கும் இந்த நோய்க்கும் தொடர்பு இல்லை. 

10) ஜப்பானில் 10 லட்சம் பேருக்கு 20 டயாலிசிஸ் சென்டர்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் 25 லட்சம் பேருக்கு ஒரே ஒரு டயாலிசிஸ் சென்டர் உள்ளது. ஒரு ஆண்டுக்கு 4000 சிறுநீரக மாற்று அறுசை சிகிச்சை மட்டுமே இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்தியாவை விட கால்வாசி மட்டுமே ஜனத்தொகை கொண்ட அமெரிக்காவில் ஆண்டுக்கு 16000 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அங்கு தாது மணல் சுரங்க குத்தகை இல்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது. 

11) சிறுநீரக பாதிப்பு எல்லா வயது தரப்பினரையும் பாதிக்கும். ஆனாலும் மேற்கத்திய நாடுகளில் வயது முதிர்ந்தவர்களை அதிகம் பாதிக்கிறது. ஆனால் இந்தியாவில் இளைஞர்கள் குறிப்பாக பணி புரியும் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இவை அனைத்தும் சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் பிரசாந்த் சி தீரேந்திரா என்பவர் 04.04.2016-ல் சமர்பித்த மருத்துவ ஆய்வறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது.

மேலும் பாராளுமன்றத்தில் கேள்வி எண் 3291-க்கு பதில் அளிக்கும் போது மத்திய சுகாதார துறை அமைச்சர் அவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகள் மட்டும் அன்றி மாவட்டம் தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வசதியை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது என்று பதில் அளித்துள்ளார்கள். அதே போல் பாராளுமன்றத்தில் கேள்வி எண் 5218-க்கு பதில் கொடுக்கும் போது மேற்கண்ட தகவலை சொன்னதோடு பொது மக்களிடம் உடல் உறுப்பு தானம் செய்யும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் மாநில அரசுகளோடு சேர்ந்து பெங்களுர், ஹைதராபாத், புதுச்சேரி, சென்னை, கல்கத்தா, அகமதாபாத், பூனே, சண்டிகார் மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் விழிப்புணர்வு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் உடல் உறுப்பு தான சட்டம் 2011-ஐ ஏற்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேற்கண்ட உண்மைகள் எல்லா மாவட்டங்களிலும் இந்தியா முழுவதுமே இந்த சிறுநீரக நோய் உள்ளது என்பதை நிரூபிக்கிறது.

என்ன தோழர்களே நமக்கு எதிராக எப்படி எல்லாம் திட்டம் போட்டு பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். நமது சக தோழர்களுக்கு தெரிவிப்பதோடு தாது மணல் தொழிலுக்கும் சிறுநீரக பாதிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை. சிறுநீரக பாதிப்பு உலகம் முழுவதும் பொதுவாக உள்ள ஒரு நோய் என்ற உண்மைகளை பொது மக்களுக்கும் நண்பர்களுக்கும் சமூக வலைத்தளம் மூலமாகவும் பரப்ப வேண்டும்.


No comments:

Post a Comment